திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே, தண்ணீர் இல்லாத குட்டையில் காயத்துடன் கிடந்த ஆண் மயிலை, தீயணைப்பு வீரர்கள் புதன்கிழமை மீட்டனர்.
மன்னார்குடி அடுத்த எடமேலையூர் வடக்கு கண்டியன் தெரு பி .பரத். இவருக்கு, தென்னந்தோப்பு அதே பகுதியில் உள்ளது. புதன்கிழமை மதியம் பரத் தோப்புக்குச் சென்று பார்த்த போது அங்கு இருக்கும் தண்ணீர் இல்லாத குட்டையில் ஆண் மயில் ஒன்று விழுந்து கிடப்பதுடன் மேலே வர முடியாமல் தவித்துக் கொண்டு இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து, மன்னார்குடி தீ நிலையத்திற்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குட்டையிலிருந்து மயிலை மீட்டனர். அதன் காலில் காயம் அடைந்திருப்பது தெரிந்ததும். மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், மன்னார்குடிக்கு கொண்டு வரப்பட்ட அந்த மயிலை, தீ நிலைய அலுவலர் கே.பாலசுப்பிரமணியம், வன அலுவலர் ஜெயசந்திரனிடம் ஒப்படைத்தார்.