புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பாலத்திற்கு அடியில் ரத்த காயங்களுடன் வழக்குரைஞர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியைச் சேர்ந்தவர் எ.முத்துவேல்(63). வழக்குரைஞரான இவர், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அண்மையில் வந்துள்ளார். இவர், ஆலங்குடியிலிருந்து செம்பட்டிவிடுதி செல்லும் சாலையில் வெள்ளிக்கிழமை மாலை நடைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடியுள்ளனர். நம்பம்பட்டியில் உள்ள பாலத்தின் கீழ்ப் பகுதியில் உடலில் பல்வேறு இடங்களில் காயங்களுடன் மர்மமான முறையில் முத்துவேல் இறந்து கிடந்தது சனிக்கிழமை தெரியவந்ததுள்ளது.
மேலும், அவர் வைத்திருந்த 2 செல்லிடப்பேசிகளையும் காணவில்லையாம். இதுகுறித்து ஆலங்குடி காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.