மருத்துவமனைகளில் இருந்து சிறப்பு மையத்துக்கு மாற்றப்படும் கரோனா நோயாளிகள்

சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் இருந்து கரோனா நோயாளிகள் சிறப்பு மையத்துக்கு மாற்றப்பட்டு வருகிறார்.
மருத்துவமனைகளில் இருந்து சிறப்பு மையத்துக்கு மாற்றப்படும் கரோனா நோயாளிகள்
Updated on
1 min read


சென்னை: சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் இருந்து கரோனா நோயாளிகள் சிறப்பு மையத்துக்கு மாற்றப்பட்டு வருகிறார்.

தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து அறிகுறி எதுவும் இல்லாத 100 கரோனா நோயாளிகள் நந்தம்பாக்கத்தில் உள்ள சிறப்பு மையத்துக்கு மாற்றப்படுகிறார்கள்.

பெரிதாக அறிகுறி இல்லாத மற்றும் உடல்நிலை சீராக இருக்கும் நோயாளிகளை, மருத்துவமனையில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு மையங்களுக்கு மாற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநரும், கரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதியை கண்காணித்து வருபவருமான டாக்டர் நாராயண பாபு இது பற்றி கூறுகையில், ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து 73 கரோனா நோயாளிகள் டிஜி வைஷ்ணவா கல்லூரியில் அமைக்கப்பட்ட சிறப்பு மையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாற்றப்பட்டனர்.

சென்னை அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்காக சுமார் 1,750 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில் 1200 படுக்கைகள் நிரம்பிவிட்டன என்றும் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியின் டீனாகவும் பொறுப்பு வகித்து வரும் நாராயண பாபு தெரிவித்துள்ளார்.

ஓமந்தூரார் அரசு மருத்துவனையில் 500 படுக்கைகள் உள்ள நிலையில், 270 படுக்கைகள் நிரம்பிவிட்டன. ஸ்டான்லி மருத்துவமனையில் 400 படுக்கைகளில், 190 படுக்கைகள் நிரம்பிவிட்டன. 

55 வயதுக்கு உட்பட்ட, எந்த அறிகுறியும் இல்லாத, உடல்நிலை சீராக இருக்கும் கரோனா நோயாளிகள் மட்டுமே சிறப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். நோயாளிகளின் விவரங்களை தீவிரமாக ஆராய்ந்தே சிறப்பு மையத்துக்கு மாற்றி வருகிறோம்.

திருவிக நகர் மற்றும் ராயபுரம் பகுதிகளில் திடீரென கரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதன் காரணமாக ஸ்டான்லி மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 366 பேர் உடல்நிலை சீராக உள்ளனர். அவர்களில் 100 முதல் 150 பேரை முதற்கட்டமாக சிறப்பு மையங்களுக்கு இடம் மாற்ற உள்ளோம் என்று மருத்துவமனை டீன் டாக்டர் ஆர். ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

சென்னையின் நந்தனம் வர்த்தக மையம், வெப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி உட்பட பல்வேறு பகுதிகளிலும் சுமார் 4000 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

நோயாளிகளை வேறு இடத்துக்கு மாற்றுவது என்பது, வெறுமனே அவர்களை மட்டும் இடம் மாற்றுவது என்பதாகாது, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவமனையையே இடம் மாற்றுவதற்கு ஒப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com