பேளூரில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கி கௌரவிப்பு
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்களின் சேவையைப் பாராட்டி, ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் இருவர், அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கி புதன்கிழமை கௌரவித்தனர்.
பொது முடக்கத்தில் குடியிருப்பு பகுதிகளில், உயிரைப் பணயம் வைத்து துப்புரவு பணிகளை மேற்கொண்டு வரும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு, ஏராளமானோர் தன்னார்வத்தோடு முன்வந்து அத்தியாவசியப் பொருள்கள், முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.
வாழப்பாடி அடுத்த பேளூர் பேரூராட்சியில் பணிபுரிந்து வரும் துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களின் சேவையைப் பாராட்டி, ஓய்வுபெற்ற அரசுப்பள்ளி தலைமையாசிரியரும், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவருமான பத்மசரவணன், 30 பேருக்கும் அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைத் தனது சொந்த செலவில் வழங்கியும், பொன்னாடை போர்த்தி மரியாதை செய்து புதன்கிழமை கௌரவித்தார். பேரூராட்சி துப்புரவுப் பணியாளர் முருகன், துளி இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
பேளூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி தலைமையாசிரியரும், பேளூர் நற்பணி மன்றத்தின் தலைவருமான ஜெயராமன், தனது சொந்த செலவில், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் துாய்மைக் காவலர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கினார். அத்தியாவசியப் பொருள்கள் வழங்கியதோடு, சேவையைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து மரியாதை செய்த கௌரவித்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் இருவருக்கும், துப்புரவுப் பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர்.