புதுச்சேரி: புதுச்சேரி தமிழகத்துடன் இணைக்கப்படாது; தற்போதுள்ள நிலையிலேயே இருக்கும் என பாஜக தேசிய செயலரும், புதுச்சேரி மாநில பொறுப்பாளருமான சி.டி. ரவி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகம், குஜராத், உத்தரபிரதேசம் மாநிலங்களைப் போல, புதுச்சேரியில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் தாமரை கண்டிப்பாக மலரும்.
கரோனா தடுப்பு நடவடிக்கையிலும், ஆட்சி நிர்வாகத்திலும் தோல்வியடைந்த புதுச்சேரி ஆளுங்கட்சியினர், அதை மறைப்பதற்காக பாஜக மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறியும், எதிர்ப்பு பிரசாரத்தை மேற்கொண்டும் வருகின்றனர்.
புதுச்சேரி தமிழகத்துடன் இணைப்பது தொடர்பாக மத்திய அரசிடம் எந்த ஒரு முடிவும் இல்லை. தற்போதுள்ள நிலையிலேயே புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருக்கும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
புதுச்சேரியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்றார் பாஜக தேசிய செயலர் சி.டி. ரவி.