ஒசூரில் மீட்சி பெறுகிறது வாகன உற்பத்தி தொழில்!

கரோனா தொற்றுப் பரவல் இன்னும் முடிவுக்கு வராத சூழ்நிலையில், வாகன உற்பத்தி துறையில் வாகனத் தேவைக்கான ஆர்டர்கள் அதிக அளவில் கிடைத்துள்ளதால், தொழில் துறை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. 
ஒசூரில் மீட்சி பெறுகிறது வாகன உற்பத்தி தொழில்!
Updated on
2 min read


கரோனா தொற்றுப் பரவல் இன்னும் முடிவுக்கு வராத சூழ்நிலையில், வாகன உற்பத்தி துறையில் வாகனத் தேவைக்கான ஆர்டர்கள் அதிக அளவில் கிடைத்துள்ளதால், தொழில் துறை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. 

சென்னையில் தொற்று அதிகமானதால், பல லட்சம் தொழிலாளர்கள் சென்னையை விட்டு தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். இதனால், சென்னையில் உள்ள அசோக் லேலண்ட்  நிறுவனமானது, ஒசூரில் உள்ள தொழிற்சாலையில் நான்கு சக்கர வாகன உற்பத்தியை அதிகரித்துள்ளது.

குறிப்பாக, ஒசூரில் உள்ள அசோக் லேலண்ட் இரண்டாவது தொழிற்சாலையில், "லாரி சேஸ்' உற்பத்தி நடைபெறுவது வழக்கம். இங்கு 1,750 நிரந்தரப் பணியாளர்கள், 4,500 ஒப்பந்தத் தொழிலாளர்கள் என 6 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் தற்போது பணிபுரிந்து வருகின்றனர். சென்னையில் செய்ய வேண்டிய ஆர்டர்களுக்கும் இங்கு உற்பத்தி செய்யக் கூடிய வசதிகள் இருப்பதால், ஒசூரில் வாகன உற்பத்தி வேகமெடுத்து வருகிறது.

இதேபோல, இருசக்கர வாகனங்களைத் தயாரிக்கும் டி.வி.எஸ். நிறுவனம் உள்ளிட்ட இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடந்த 6 மாத காலமாக முடங்கிய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் வேகப்படுத்தியுள்ளன. 

இவற்றைத் தவிர, விவசாயத்துக்குத் தேவையான வாகன உற்பத்திக்கு இதுவரை இல்லாத அளவில் கூடுதல் ஆர்டர்கள் கிடைத்துள்ளதால், மதுரை, கேரளம் போன்ற இடங்களில் உற்பத்தி செய்யும் டிராக்டர் தொழிற்சாலைகளுக்குத் தேவையான உதிரிபாகங்களின் உற்பத்தியும் அதிகரித்துள்ளன. 

கர்நாடக மாநிலம், மாலூரில் இயங்கி வரும் ஹீரோ ஹோண்டா நிறுவனத்தில் இரு சக்கர வாகன உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்தத் தொழில் நிறுவனத்துக்குத் தேவையான உதிரி பாகங்களைச் செய்து கொடுக்கும் உப ஒப்பந்தப் பணியில் ஒசூரில்  உள்ள 3,000 சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் தீவிரமாக இயங்கி வருகின்றன. 

தமிழக தொழில்துறையில் பணிபுரிந்துவந்த 7.5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்குச் சென்றுவிட்டனர். ஒசூரில் மட்டும் 75,000 புலம்பெயர் தொழிலாளர்கள் சென்றுவிட்ட நிலையில், ஃபிட்டர், வெல்டர் போன்ற பணிகளுக்கு அதிக அளவில் ஆட்கள் தேவைப்படுகின்றனர்.

ரயில் சேவை முடக்கம், பொதுப் போக்குவரத்து முடக்கம் ஆகியவற்றில் செப்டம்பர் மாதத்திலிருந்து தளர்வு ஏற்பட்டால், வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களிலும் இருந்தும் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பிவர வாய்ப்பு உள்ளது. அதைத் தொடர்ந்து தொழில் துறை உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என அத்துறையினர் எதிர்பார்க்கின்றனர். 

மாவட்டங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்தை உடனே தொடங்கினால் மட்டுமே, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம், வேலூர், திருவண்ணாமலை போன்ற பகுதிகளுக்குச் சென்ற தொழிலாளர்கள் மீண்டும் தொழில் நகரமான ஒசூருக்கு திரும்பக்கூடிய சூழல் ஏற்படும். மத்திய அரசும் ரயில் சேவையை அனுமதித்தால், கரோனா தொற்றால் சொந்த ஊர்களுக்குச் சென்ற புலம் பெயர் தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் வர வாய்ப்பு கிடைக்கும். 

இதுகுறித்து தமிழ்நாடு சிறு, குறுந்தொழில் சங்கத்தின் இணைச் செயலர் வெற்றி.ஞானசேகரன் கூறியதாவது: 

சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் தற்போதுதான் வாகன உதிரி பாகங்களின் உற்பத்தியைத் தொடங்கி உள்ளன. 

இந்த நிறுவனங்கள், பெரிய தொழிற்சாலைகளுக்கு உதிரி பாகங்களை விற்பனை செய்த பின் 6 மாதங்கள் கழித்தே பணம் கிடைக்கும். ஆனால், மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும், கடனை திருப்பிச் செலுத்துவதற்கு வழங்கிய சலுகை  ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்துள்ளது. 

ஆனால், சிறு தொழில் துறையினர் உடனடியாக கடனைத் திரும்பச் செலுத்தும் சூழ்நிலையில் இல்லை. எனவே, சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு மேலும் 3 மாத கால அவகாசம் வழங்க வேண்டும். 

இரு சக்கர வாகனம் ஆடம்பரப் பொருள் அல்ல என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து வருகிறார். 

ஆனால், சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரியை மத்திய அரசுஅமல்படுத்தியதிலிருந்து, சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் உதிரி பாகங்களுக்கு 18 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரியை 18 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என 3 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். 

இந்தக் கூடுதல் வரி விதிப்பால் சிறு, குறு நிறுவனங்களுக்கு நடைமுறைக் கடன் கூடி  நிதிச்சுமை அதிகரித்துள்ளது. எனவே, உதிரி பாகங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை மீண்டும் 18 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.

பிரதமர் மோடி 3 ஆண்டுகள் முன்னர் அறிவித்த ராணுவத் தடவாள வழித்தடத்தில் ஒசூர், சேலம், திருச்சி, சென்னை போன்ற நகரங்கள் உள்ளன. எனவே, ராணுவத் தடவாள உற்பத்தியை மத்திய அரசு உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com