தமிழகத்தில் அரசியல் மாற்றமும் ஆட்சி மாற்றமும் அவசியம் தேவை என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
2017 டிசம்பர் 31 ஆம் தேதியே நான் அரசியலுக்கு வருவதாக கூறியிருந்தேன். கொடுத்த வாக்கில் நான் பின்வாங்கப் போவதில்லை. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று கூறியிருந்தேன்.
மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியை உண்டாக்க வேண்டும் என்றும் கூறியிருந்தேன். எழுச்சியை உண்டாக்கிய பின்னர் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் கரோனா காலத்தில் அது முடியவில்லை.
கரோனா வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்க வேண்டும். ஆனால், மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் என்னால் மக்களை நேரில் சந்திக்க முடியவில்லை. மக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் அது உங்களுக்கு பெரிய ஆபத்து என்று மருத்துவர்கள் கூறினர். நான் உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூருக்கு சென்று உயிர் பிழைத்து வந்தது தமிழக மக்களிடன் பிரார்த்தனையால்தான். எனவே, இப்போது தமிழ் மக்களுக்காக என் உயிரே போனாலும்கூட என்னைவிட சந்தோசப்படும் நபர் யாராகவும் இருக்க முடியாது.
அரசியல் மாற்றம் காலத்தின் கட்டாயம். காலத்தின் தேவை. எல்லாவற்றையும் மாற்றம் வேண்டும். இதில் நான் ஒரு சின்ன கருவி. மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மாற்றம் நடக்க வேண்டும்.
வெற்றி அடைந்தாலும் அது மக்களுடைய வெற்றி; தோல்வி அடைந்தாலும் அது மக்களுடைய தோல்வி. இந்த மாற்றத்துக்கு மக்கள் அனைவரும் எனக்கு துணை நிற்க வேண்டும் என்று கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
40 சதவீதம் 'அண்ணாத்த' படப்பிடிப்பு மட்டும் நான் முடித்துக்கொடுக்க வேண்டியுள்ளது.
என்னுடைய பாதையில் வெற்றியடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒரு தலையெழுத்து உள்ளது. அதேபோல் நாட்டுக்கும் ஒரு தலையெழுத்து இருக்கிறது. தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் நிச்சயம் நடக்கும். இப்போ இல்லனா எப்போவும் இல்ல' என்றார்.
முன்னதாக, ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சித் தொடங்கப் போவதாகவும், கட்சி தொடங்கப்படும் தேதி டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.