திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா பிரசாரம் செய்ய 2 நாள்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்ததை எதிர்த்து முறையீடு செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் பரப்புரையில் திமுக எம்பி ஆ.ராசா, முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்து அவதூறாகப் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விளக்கமளித்த ஆ.ராசா மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அதிமுக தரப்பில், திமுக எம்பி ஆ.ராசா மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக ஆ.ராசா விளக்கமளிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி ஆ.ராசா தேர்தல் ஆணையத்துக்கு விளக்கக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். இதனையடுத்து இந்தியத் தேர்தல் ஆணையம் ஆ.ராசா 2 நாள்களுக்குப் பிரசாரம் செய்யத் தடை விதித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு ஆ.ராசா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சண்முகசுந்தரம், தமிழக பேரவைத் தேர்தலுக்கு சில நாட்களே உள்ளது. எனவே ஆ.ராசா பிரசாரம் செய்யத் தேர்தல் ஆணையம் விதித்துள்ள தடையை எதிர்த்து தாக்கல் செய்யும் மனுவை அவசர வழக்காக நாளை விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அவசர வழக்காக விசாரிக்க முடியாது என நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.