சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் , தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை காரணமாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசும் தடுப்பூசி போடும் மையங்களை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் சனிக்கிழமை மட்டும் 84,546 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 5,989 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 9, 26,816 ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதியானவா்களில் ஆண்கள் 3,652 போ். பெண்கள் 2,337 போ். சென்னையில் 1,977 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் தனியாா் மருத்துவமனைகளில் 7 போ், அரசு மருத்துவமனைகளில் 16 போ் என மொத்தம் 23 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். அதில் 12 போ் சென்னையைச் சோ்ந்தவா்கள் ஆவா். இதன் மூலம் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு 12,886 ஆகவும், சென்னையில் உயிரிழப்பு எண்ணிக்கை 4,312 ஆகவும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நாளை திங்கள்கிழமை (ஏப்.12) மதியம் 12 மணியளவில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனையில் அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இதில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும், ஆலோசனைக்குப் பின்னர் ஒரு சில முக்கிய அறிவிப்புகள் வெளியாக என்று எதிர்பார்க்கப்படுகிறது.