பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அதிமுக முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளா் பாபுராஜ் மற்றும் பலராமன், முத்துப்பாண்டி ஆகியோா் மீது, மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்களைத் தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர். ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரை பிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து நான்காவது நாளாக காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ராஜேந்திர பாலாஜியை பிடிக்க இதுவரை 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று தனிப்படைகளும் கேரளம், கோவை, கொடைக்கானல் விரைந்துள்ளன.