பேரிடரைக் கடந்து அனைவரும் நலன்பெற வேண்டும்: ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து

உலகில் வாழும் அனைவரும் பேரிடரைக் கடந்து நலன் பெற்றிட விழைகிறேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated on
1 min read


சென்னை: உலகில் வாழும் அனைவரும் பேரிடரைக் கடந்து நலன் பெற்றிட விழைகிறேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "இனிமை சூழ்ந்து - இன்னல் அகன்று, அனைத்து மக்களும் நலமும் வளமும் பெற்றிட நம்பிக்கையுடன் பிறக்கிறது 2022 ஆங்கிலப் புத்தாண்டு. கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் கண்டு வரும் பேரிடர்ச் சூழல், மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்து, மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயல்படும் நமது அரசு, எதிர்வரும் புத்தாண்டில் இன்னும் கூடுதலான செயலாற்றலுடன் மக்கள் நலனுக்கான பணிகளைத் தொடர்ந்திட உறுதிபூண்டுள்ளது.

நமது அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையினை நிறைவேற்றும் வகையில் நிர்வாகச் செயல்பாடுகள் புத்தாண்டில் புதுப்பொலிவு பெறும். ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ எனும் மானுடத் தத்துவம் பாடிய பெருமைக்குரிய நமது தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் செழித்திடவும், உலகில் வாழும் மக்கள் யாவரும் பேரிடரைக் கடந்து நலன் பெற்றிடவும் விழைகிறேன். நமது அரசுக்கு உறுதுணையாக விளங்கிடும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com