விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஏற்பட்ட விபத்தில் மதுரையிலிருந்து அரசு விழாவில் பங்கேற்க சென்ற 4 பேர் காயமடைந்தனர்.
மதுரை கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ஸ்ரீமான், மதுரையில் இருந்து அதே பகுதியைச் சேர்ந்த பழனிமுத்து அவரது மனைவி சசிகலாராஜா, கனி அவரது மனைவி அழகுசுந்தரி உள்ளிட்ட எட்டு பேருடன் சென்னையில் நடைபெறும் பயிர் கடன் தள்ளுபடி அரசு விழாவில் பங்கேற்க சென்னைக்கு வியாழக்கிழமை இரவு புறப்பட்டனர்.
மதுரையை சேர்ந்த லட்சுமணன் வேனை ஓட்டி வந்தார். வேன் திண்டிவனம் அடுத்த தென்பசார் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், பயனாளி பழனிமுத்து, அவரது மனைவி சசிகலா, அழகு சுந்தரி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.