புதிய திட்டங்கள் தமிழக வளர்ச்சிக்கு உதவும்: பிரதமர்
தமிழகத்தில் தொடங்கிவைக்கப்பட்டுள்ள புதிய கட்டமைப்பு திட்டங்கள் தமிழக வளர்ச்சிக்கு உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் தொடங்கிவைக்கப்பட்டுள்ள புதிய உள் கட்டமைப்புத் திட்டங்கள் தமிழக வளர்ச்சிக்கு உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்டங்களைத் தொடக்கி வைத்தார்.
பின்னர் உரையாற்றிய அவர், வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு என தமிழில் பேசி உரையைத் தொடக்கினார்
பின்னர் ஒளவையார், பாரதியார் பாடல் மேற்கோள் காட்டி மோடி உரையாற்றினார்.
ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம்; ஆலைகள் வைப்போம், கல்விச் சாலைகள் வைப்போம்; நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்; ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் என்ற மகாகவி பாரதியாரின் பாடலை ஏற்கோள் காட்டி பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
வரப்புயர நீர் உயரும்; நீர் உயர நெல் உயரும்; நெல் உயர குடி உயரும்; குடி உயர கோல் உயரும்; கோல் உயரக் கோன் உயர்வோன் என ஒளவையார் பாடைலையும் மேற்கோள் காட்டினார்.
புதிய திட்டங்கள் தமிழக வளர்ச்சிக்கு உதவும்:
தமிழகத்தில் தொடங்கிவைக்கப்பட்டுள்ள புதிய கட்டமைப்பு திட்டங்கள் தமிழக வளர்ச்சிக்கு உதவும். கல்லணை கால்வாய் சீரமைப்பால் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மிகவும் பயனடையும்.
அர்ஜூன் பீரங்கி தயாரிப்பின் மூலம் பீரங்கி உற்பத்தியின் மையமாக தமிழகம் உருவெடுக்கிறது.
நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கி தானிய உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை புரிந்துள்ளது
கரோனா பொதுமுடக்க சூழல் இருந்தபோதும் மெட்ரோ விரிவாக்கப் பணிகள் நடந்து முடிந்துள்ளன.
228 கிலோ மீட்டர் தூர ரயில் பாதையில் மூலம் உணவு தானியம் விரைவாக கொண்டு செல்லப்படும்.
புதிய ரயில் பாதை மின்மயமாக்கல் டெல்டா மாவட்டங்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
யாழ்பாணம் சென்ற ஒரே பிரதமர் நான்:
இலங்கையிலுள்ள யாழ்பாணத்திற்குச் சென்ற ஒரே இந்தியப் பிரதமர் நான் மட்டுமே என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மேலும் பேசிய அவர், இலங்கைத் தமிழர்களின் நலன் காக்கும் அரசு மத்திய அரசு.
இலங்கை வாழ் தமிழக சகோதர, சகோதரிகள் மீது மத்திய அரசு அக்கறை செலுத்தி வருகிறது. இலங்கை தமிழர்களின் நலன் குறித்து அங்குள்ள தலைவர்களிடம் வலியுறுத்தும் ஒரே அரசு மத்திய அரசு தான்.
இலங்கை தமிழர்கள் சமத்துவம், நீதி, அமைதி, கண்ணியத்துடன் வாழ்வதை உறுதி செய்துள்ளோம்.
தமிழக மீனவர்கள் உரிமை காக்கப்படும்:
தமிழக மீனவர்களின் மீன் பிடிக்கும் உரிமையை மத்திய அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. மீனவர்களை நினைத்து தேசம் பெருமைக் கொள்கிறது. அவர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது.
தமிழக மீனவர்களின் நியாயமான உரிமைகளை மத்திய அரசு உறுதி செய்யும். இலங்கை சிறையில் தற்போது தமிழக மீனவர்கள் யாரும் இல்லை. பிடித்து வைக்கப்பட்டிருந்த படகுகள் கூட விடுவிக்கப்பட்டுள்ளன. இலங்கையால் எப்போது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டாலும் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை ஏற்பு:
7 பிரிவுகளை சேர்ந்தவர்கள் தேவேந்திர குல வேளாளர் என அழைக்கப்பட வேண்டும் என்று விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் இனி தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கப்படுவார்கள்.
தேவேந்திர குல வேளாளர் சகோதர சகோதரிகள் பாரம்பரிய பெயரால் இனி அழைக்கப்படுவார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி முடித்தவுடன் பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருடன் கை உயர்த்தியபடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...