ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவா்கள் வெள்ளிக்கிழமை ஐந்தாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து அண்மையில் மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவா்களை, ஒரு விசைப்படகுடன் இலங்கை கடற்படையினா் சிறைபிடித்துச் சென்றனா். இதனைக் கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள 49 மீனவா்கள் மற்றும் 7 விசைப்படகுகளை மத்திய, மாநில அரசுகள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி திங்கள்கிழமை முதல் மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்த போராட்டம் வெள்ளிக்கிக்கிழமை இரண்டாவது நாளாக தொடருகிறது. ஜன.23 ஆம் தேதி படகுகளில் கருப்பு கோடி ஏற்றிக்கொண்டு கச்சத்தீவை நோக்கிய பயணம் செல்ல உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் 6 ஆயிரம் மீனவா்கள் மற்றும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளா்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.