மயிலாடுதுறை: 14-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தாத தமிழக அரசைக் கண்டித்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்துத் தொழிற்சங்கத்தினர் மயிலாடுதுறை அரசுப்போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு சனிக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் செயல்படும் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை மண்டல அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்துக்கு, அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணியின் நாகை மண்டல பொதுச் செயலாளர் பூவராகவன் தலைமை வகித்தார்.
தொழிலாளர் முன்னேற்ற சங்க கிளை பொறுப்பாளர் கே.இளங்கோவன், மத்திய சங்க அமைப்பு செயலாளர் ஆர்.பத்மநாபன், கிளை செயலாளர் எம்.வெங்கடேசன், பொருளாளர் யு.செந்தில், சிஐடியு சார்பில் மத்திய சங்க துணைத் தலைவர் எம்.ராமகிருஷ்ணன் மற்றும் என்.பாரதிமோகன், ஐஎன்டியுசி கிளைத் தலைவர் சந்திரசேகரன், ஓய்வுபெற்ற ஊழியர் முன்னேற்ற நல சங்க மண்டல துணைத் தலைவர் ஏ.சிவாஜி, மண்டல இணை செயலாளர் பி.தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் 14-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து பேசாமல் இழுத்தடிக்கும் தமிழக அரசு நிர்வாகத்தைக் கண்டித்தும், உடனடியாக ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்திட வலியுறுத்தியும் 1.4.2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்த பணியாளர்களை ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கக் கோரியும்;, நிலுவையில் உள்ள பஞ்சப்படியை வழங்கவும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 2015-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள பஞ்சப்படியை வழங்கவும் வலியுறுத்தப்பட்டது.