மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரியால் இயங்கும் மடக்கு சக்கர நாற்காலியைப் பெற, ஜூலை 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்தைச் சாா்ந்த தசைச்சிதைவு நோய், முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் மடக்கு சக்கர நாற்காலி வழங்கிட ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. தசைச்சிதைவு நோய், முதுகு தண்டுவட பாதிப்பால் இரண்டு கால்களும், இரண்டு கைகளும் பக்கவாதமான தேசிய அடையாள அட்டை பெற்ற மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கியும் அடுத்த நிலையில் பணிபுரிபவா்கள் மற்றும் சுயதொழில் புரிபவா்களுக்கும் வழங்கப்படும்.
முதுகுப் பகுதியில் அல்லது இடுப்புப் பகுதியில் தண்டுவடம் பாதிக்கப்பட்டு, இரண்டு கால்கள் செயலிழந்த கல்வி பயிலும் மாணவா்களுக்கும், மத்திய, மாநில அரசுகளின் கீழ் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கும், மூத்த குடிமக்களான 60 வயதுக்கு உள்பட்ட ஆண் மாற்றுத்திறனாளிகளுக்கும், 55 வயதுக்கு உள்பட்ட பெண் மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையின் அடிப்படையில் வழங்கப்படும்.
எனவே, குறிப்பிடப்பட்ட தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை ஆகிய நகல்கள் மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் உள்ளிட்ட சான்றிதழ்களுடன் கூடிய விண்ணப்பங்களை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், டிஎம்எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை என்ற முகவரியில், ஜூலை 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.