அவிநாசி: சேவூர் அருகே பொங்கலூரில் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு மாற்றாக வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி பொதுமக்கள் வட்டாட்சியர், ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை மனு அளித்தனர்.
இது குறித்து பொதுமக்கள் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பது, திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம் பொங்கலூர் ஊராட்சி, தாசராபாளையத்தில் அரசுக்கு சொந்தமான க.ச.112, 113 இல் வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என 2010ஆம் ஆண்டு முதல் 11 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதற்கிடையில், 2019ஆம் ஆண்டு அரசு, தசாராபாளையம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு அமைப்பதற்கான அனுமதி வழங்கியது. இதற்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும், 2020 பிப்ரவரி மாதம் ஊராட்சி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இருப்பினும் அன்றைய மாவட்ட ஆட்சியர் 2020 ஜூலை மாதத்தில் இத்தீர்மானத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், அடுக்குமாடி குடியிருப்பு அமைப்பதற்கான அனுமதி வழங்கினார். ஆகவே பொதுமக்கள் நலன் கருதி, மாவட்ட ஆட்சியர் விடுத்த உத்தரவை திரும்பப் பெற்று, அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றாக வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.