மயிலாடுதுறை: மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் உருளைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜகுமார் புதன்கிழமை வழங்கினார்.
கரோனா தீநுண்மி பாதிப்பில் இருந்து நாட்டை பாதுகாக்கும் பணியில் அரசுடன் இணைந்து ரோட்டரி சங்கங்கள் தீவிர பணியாற்றி வருகின்றன. வெளிநாடுவாழ் இந்தியர்களால் தொடங்கப்பட்ட 'ஆக்ட் கிரான்ஸ்" அமைப்பு ரோட்டரி சங்கங்கள் மூலம் இந்தியா முழுவதும் ரூ.300 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்களை வழங்க முன்வந்துள்ளது. இதில், தமிழ்நாட்டிற்கு 5000 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 2000 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட உள்ளது.
முதல்கட்டமாக சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், ஈரோடு, ஊட்டி, திருப்பூர், உடுமலை, தாராபுரம் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வகையில், ரோட்டரி மயிலாடுதுறை திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.ராமன் முயற்சியில் மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனைக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 41 ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஒரு குளிர்சாதனப் பெட்டி ஆகியன மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.
இந்த விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜகுமார் பங்கேற்று மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலர் ஆர்.ராஜசேகரிடம் வழங்கினார்.
ரோட்டரி மாவட்ட ஆளுநர் பாலாஜி பாபு, மாவட்ட உதவி ஆளுநர் ரவிக்குமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.ராமன், மயிலாடுதுறை ரோட்டரி சங்க தலைவர் துரை, செயலாளர் காமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அனைத்து ரோட்டரி சங்க நிர்வாகிகள், மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில், மருத்துவர் வீரசோழன் நன்றி தெரிவித்தார்.