தமிழகத்தில் வலுவான அரசைக் கட்டமைக்க திமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம்: ராகுல் ட்வீட்
தமிழ் மக்களுக்கான ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டமைக்க திமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக தில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
தொடர்ந்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் இடைக்காலத் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தியை நேரில் சந்தித்துப் பேசினார். முதல்வருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் சென்றிருந்தார்.
சந்திப்பிற்குப் பின்னர் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி என்றும் தமிழ் மக்களுக்கான ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டமைக்க திமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.