மதுரையில் கரோனா சிகிச்சைக்கு 12 தனியார் மருத்துவமனைகளில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திரும்பப் பெறப்பட்டு உரியவர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் நிமிடத்திற்கு 200 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபோது கரோனா பரவல் அதிகமாக இருந்தது. பின்னர் அதனை வகைப்படுத்தியும், ஆக்சிஜன் பற்றாக்குறைகளை சரி செய்ததுடன், மூன்றாம் நிலையில் வந்தாதலும் நிரந்தரமாக ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்பதற்காக பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் மதுரையில் நான்கு இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, தற்போது இரண்டு செயல்பட்டு வருகிறது. மதுரை மே 26 -ஆம் தேதி 1166 ஆக இருந்த தொற்று பாதிப்பு தற்போது 70 ஆக குறைந்துள்ளது. மதுரை மாநகர் பகுதிகளில் பொதுமக்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் , கண்காணிக்கவும் பறக்கும்படைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் ஆய்வகத்தில் உள்ள கரோனா டெல்டா பிளஸ் தொற்று பரிசோதனைக் கருவிகள் பற்றி கண்டறிந்து , அவற்றை வாங்கி தமிழகத்தில் சென்னை மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் டெல்டா பிளஸ் பரிசோதனை மையம் அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தனியார் மருத்துவமனையில் கூடுதல் கட்டண வசூலிப்பது குறித்து கண்காணிக்கப்பதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. தனி நபர்கள் அளித்த புகாரின்படி, மதுரையில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த 12 தனியார் மருத்துவமனைகளிடம் இருந்து கூடுதல் கண்டனத்தை திரும்பப் பெற்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புகார் தொடர்பாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கரோனா சிகிச்சை அளிக்கும் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.