
திண்டிவனம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரி டிரைவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் சுமார் 5 லாரிகளை வைத்துள்ளார். இந்த லாரிகள் மூலம் தினசரி சென்னையிலிருந்து திருச்சிக்கு மளிகைப் பொருள்களை ஏற்றி செல்வது வழக்கம். இந்த லாரியின் ஒன்றை திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் ஓட்டி வருகிறார். இவர் நேற்று சென்னையிலிருந்து மளிகை பொருள்களை லாரியில் ஏற்றிக் கொண்டு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
லாரி திண்டிவனம் அடுத்த கேணிப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே அதிகாலை 3 மணியாவில் சென்றுகொண்டிருந்த போது இயற்கை உபாதைக்காக சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு அப்பகுதியில் உள்ள இருட்டு பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு மறைந்திருந்த ஒரு இளம்பெண் மற்றும் இரு மர்ம நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி வைத்துள்ள பணத்தை கொடுக்கும்படி வற்புறுத்தியுள்ளனர். தன்னிடம் ரூ.300 மட்டுமே உள்ளதாக கூறியதை ஏற்க மறுத்த மர்ம கும்பல் அவர் நிறுத்தி வைத்திருந்த லாரிக்குச் சென்று அதிலிருந்த சுமார் ரூ.1,500 பறித்துக் கொண்டதாக தெரிகிறது. இதனால் அலறியபடி நெடுஞ்சாலையில் ஓடியுள்ளார். அவ்வழியே சென்ற விக்கிரவாண்டி சுங்கச்சாவடி ரோந்து வாகன ஊழியர்கள் அங்கு வருவதைப் பார்த்த அந்த மர்ம நபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் திண்டிவனம் டி.எஸ்.பி கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். நெடுஞ்சாலையில் லாரி ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.