/

கொடைக்கானல் மலைச்சாலையில் கார் கவிழ்ந்ததில் 3 பேர் பலி; இருவர் காயம்

பெரியகுளம் அருகே கொடைக்கானல் மலைச்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை, 2 பெண்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 

News image
கொடைக்கானல் மலைச்சாலையில் கார் கவிழ்ந்ததில் 3 பேர் பலி; இருவர் காயம்
Updated On :28 ஜனவரி 2024, 4:31 am

DIN

பெரியகுளம்: பெரியகுளம் அருகே கொடைக்கானல் மலைச்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை, 2 பெண்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 

மேலும் இருவர் காயமடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பெரியகுளம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் அவரது உறவினர்கள் வழக்குறைஞர் கோகுல், நந்தினி, அழகுராணி மற்றும் குழந்தை தன்யா உள்பட 5 பேர் தீபாவளி விடுமுறைக்காக கொடைக்கானலுக்கு சென்றிருக்கின்றனர். கொடைக்கானலை சுற்றிப் பார்த்து விட்டு வெள்ளிக்கிழமை இரவு பெரியகுளம், அடுக்கம் சாலை வழியாக காரில் இறங்கியுள்ளனர்.

காரை கோகுல் ஓட்டி வந்துள்ளார். அடுக்கத்தில் இருந்து பெரியகுளம் செல்லும் மலைச் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து, விபத்துக்குள்ளானது. இதில் நந்தினி, அழகுராணி மற்றும் குழந்தை தன்யா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். 3 பேரும் சம்பவ இடத்திலேய இறந்தனர்.

காயமடைந்த கார்த்திகேயன் பள்ளத்தில் இருந்து மேலே ஏறி தேனி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி கீழே இறங்கி 5 பேரையும் மீட்டனர்.

காயமடைந்த கார்த்திகேயன் மற்றும் கோகுல் இருவரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து பெரியகுளம் காவல்துறையினர் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.