சென்னை: கடந்த இரண்டு நாள்களாகத் தமிழகத்தில் கரோனா பாதிப்பின் வேகம் சற்று குறைந்துள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று பரவல் நிலவரம் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார் ராதாகிருஷ்ணன்.
அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கத்தால் கரோனா பரவலின் வேகம் சற்றுக் குறைந்திருக்கிறது. கடந்த இரண்டு நாள்களாகத் தமிழகத்தில் கரோனா பாதிப்பு வேகம் குறைந்துள்ளது. அடுத்த சில நாள்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வரக் கூடாது.
தமிழகத்தில் மட்டுமல்ல.. இந்தியாவிலும் இன்று கரோனா பாதிப்பு சற்றுக் குறைந்துள்ளது.. அதுபற்றி செய்தியைப் படிக்க..
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, மிகத் தீவிரமாக அதிகரித்து வந்த கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. பொது நிகழ்ச்சிகளில் மக்கள் கலந்துகொள்வதைக் குறைத்துக் கொள்வது, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தப் பெரிதும் உதவும்.
முகக்கவசம் அணியாமல் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம். தேவையின்றி, பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும்.
இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, நாள்தோறும் பதிவான கரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இன்னும் தீவிரமாகக் கட்டுப்பாட்டைப் பின்பற்றினால், கரோனா பரவல் குறையும் நிலையை எட்டலாம் என்று தெரிவித்துள்ளார்.
கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, தமிழகத்தில் நாள்தோறும் ஒரு லட்சம் அளவிலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார்.