சென்னை மாநகரில் 49 இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கம்பங்களில் மக்கள் இலவச வை-பை வசதியைப் பெறலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேம்பாலங்களுக்குக் கீழ் பூங்கா, சுவரொட்டிகள் அகற்றம், மரம் நடுதல் என பல பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
இத்திட்டத்தில் முக்கிய இடங்களை கண்காணித்தல், பேரிடர் மேலாண்மை மழை, வெள்ளப்பெருக்கு, கழிவுகள் அகற்றம் உள்ளிட்ட பல தகவல்களுக்காக ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. ரிப்பன் மாளிகையில் இதற்கான கட்டுப்பாட்டு மையம் இயங்குகிறது.
இந்நிலையில் சென்னை மாநகரில் 49 இடங்களில் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கம்பங்களில் உள்ள ‘வை-பை’ வசதியை பொதுமக்கள் இலவசமாக 30 நிமிடங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்காக பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்ணை பதிவு செய்து ஒடிபி கொண்டு சரிபார்த்து பின்னர் சேவையைப் பெறலாம்.
மேலும், எந்தெந்த இடங்கள் ஸ்மார்ட் கம்பங்கள் உள்ளன என்பது குறித்த தகவல்களை https://chennaicorporation.gov.in/gcc/images/WiFiSmartPol.pdf என்ற தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.