
மதிப்பெண்ணில் திருப்தியில்லாத மாணவர்கள் என்ன செய்யலாம்?
சென்னை: தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் கடந்த கல்வியாண்டில் (2020-2021) பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை (ஜூலை 19) காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டது.
12ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
மேலும், 12ஆம் வகுப்பு மாணவர்களின் செல்லிடப்பேசி எண்களுக்கே அவர்கள் பெற்ற மதிப்பெண் பட்டியல் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
எனவே, தங்களது மதிப்பெண்களை அறிந்து கொள்ள கிராமப்புற மாணவர்கள், எங்கும் அலைய வேண்டியதில்லை. அவர்கள் பள்ளியில் அளித்த செல்லிடப்பேசி எண்ணுக்கே மதிப்பெண் விவரங்களை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளியிடப்பட்டிருக்கும் மதிப்பெண்ணில் திருப்தியில்லாத மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதைத் தவிர வேறு வழியில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில், 600க்கு 600 மதிப்பெண் யாரும் எடுக்கவில்லை; 551 மதிப்பெண்கள் முதல் 600 வரை 30,600 பேர் எடுத்துள்ளனர்.
தற்போது வெளியான மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவர்களும், தனித் தேர்வர்களும், தேர்வெழுதாதவர்களுக்கும் செப்டம்ர் அல்லது அக்டோபர் மாதத்தில் தேர்வு நடத்தப்படும். அதை எழுதலாம் என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.