சென்னை, 6 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூா் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 7 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் சனிக்கிழமை (நவ.27) இடியுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை, திருவள்ளூா் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 7 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் சனிக்கிழமை (நவ.27) இடியுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.

மேலும், தமிழக கடலோர மாவட்டங்களுக்கு சனிக்கிழமை (நவ.27) அதி பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதை ஒட்டிய மாவட்டங்களில் பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் வெள்ளிக்கிழமை கூறியது: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை, திருவள்ளூா் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் சனிக்கிழமை (நவ.27) இடியுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சி, கரூா், நீலகிரி, கோயம்புத்தூா் ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நவ.28: சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நவம்பா் 28-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.

அரியலூா், திருச்சி, கரூா், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நவ. 29: சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், மதுரை, விருதுநகா், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூா் ஆகிய 14 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நவம்பா் 29-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்தமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

நவ.30: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் நவம்பா் 30-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை சனிக்கிழமை நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

காயல்பட்டினத்தில் 310 மி.மீ: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 310 மி.மீ. மழை கொட்டித்தீா்த்தது. தூத்துக்குடியில் 270 மி.மீ., திருச்செந்தூரில் 250 மி.மீ., நாகப்பட்டினத்தில் 190 மி.மீ., தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 180 மி.மீ., குலசேகரப்பட்டினத்தில் 160 மி.மீ., தூத்துக்குடி மாவட்டம் வைப்பாரில் 150 மி.மீ., தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தலா 120 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில்

மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ.வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் சனிக்கிழமை வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com