கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து பசும்பொன்னுக்கு தடையை மீறி நடைபயணம் காரணமாக, போலீஸ் குவிக்கப்பட்டதால் வெள்ளிக்கிழமை பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
தேனி மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் பசும்பொன் பிரிவு சார்பில் தேவர் குருபூஜைக்கு வெள்ளிக்கிழமை கம்பத்திலிருந்து பசும்பொன்னுக்கு நடைபயணமாக செல்வதாக கட்சியினர் அறிவித்து இருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதனைத்தொடர்ந்து தடையை மீறி நடைபயணம் செல்ல உள்ளதாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் அறிவித்தனர்.
இந்த நிலையில் கம்பம் வடக்கு தெற்கு காவல் ஆய்வாளர்கள் புவனேஸ்வரி லாவண்யா தலைமையில் போலீசார் 50க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டனர்.
காலை நேரத்தில் போலீசார் குவிக்கப்பட்டதால் கம்பம் தேனி பிரதான சாலையில் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.