
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய தீர்மானம் நிறைவேற்றம்
சென்னை: இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சிஏஏ) ரத்து செய்யக் கோரி சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த தீர்மானம் நிறைவேறியது.
இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக், தமிழக சட்டப்பேரவையில் இன்று, இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை ஸ்டாலின் முன்மொழிந்து பேசுகையில், மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் மதநல்லிணக்கம், மதசார்பின்மை கோட்பாடுகளுக்கு உகந்ததாக இல்லை.
இந்திய நாட்டின் ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை போற்றிப் பாதுகாக்க இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்.
இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம். சட்டப்படியான சமத்துவம், சட்டப்படியான பாதுகாப்பை மத்திய அரசு மறுக்க முடியாது.
நாட்டுக்கு அகதிகளாக வருவோரை மதரீதியாகப் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் சட்டம் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தீர்மானத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்.