மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் தொடக்கமாக நாளான செவ்வாய்க்கிழமை இரவு சுந்தரராஜப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடைபெற்றது.
மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் முதல் நாள் மானாமதுரை நகராட்சி அலுவலகத்தின் மண்டகப்படி நடைபெற்றது. இதையொட்டி நகராட்சி துணைத்தலைவர் பாலசுந்தரம்,நகராட்சி ஆணையர் கண்ணன், தலைமை எழுத்தர் கணேசன் உள்ளிட்ட அலுவலக பணியாளர்கள் அழகர் கோயிலுக்குச் சென்று சுந்தரராஜ பெருமாளை வாண வேடிக்கையுடன் மேளதாளம் முழங்க பல்லக்கில் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிக்கு அழைத்து வந்தனர்.
அதைத்தொடர்ந்து இங்கு இரவு சுந்தரராஜ பெருமாளுக்கு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
இந் நிகழ்ச்சியில் மானாமதுரை நகராட்சித் தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம், ஆணையர் கண்ணன் தலைமை எழுத்தர் கணேசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட பக்தர்கள் திரளாக பங்கேற்று பெருமாளை தரிசனம் செய்தனர். அதன் பின்னர் கருட வாகனத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் மானாமதுரை நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து நள்ளிரவு கோயிலைச் சென்றடைந்தார்.. வீதிகளில் மக்கள் பெருமாளை வரவேற்று பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனர்.