

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திய தமிழக அரசை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில், 44 செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. 12 நாள்கள் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், அணிகளுக்கும் பதக்கங்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இது தொடர்பாக சுட்டுரையில் தமிழ் மொழியில் பதிவிட்ட மோடி, 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும் அரசும் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளார்கள்.
உலகெங்கிலும் இருந்து இந்தப் போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள் எனப் பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
உங்களின் பாரட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விருந்தோம்பலும், சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரு குணங்கள்.
உங்களின் நிலையான ஆதரவை எதிர்பார்ப்பதுடன், இதுபோன்ற உலகளாவிய நிகழ்வுகளை நடத்துவதற்கு தமிழகத்திற்கு வாய்ப்பளிக்க கோரிக்கை வைக்கிறேன். யாதும் ஊரே, யாவரும் கேளிர் எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.