திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்கள் இன்று முதல் இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜனவரி 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியொட்டி வைகுண்ட நுழைவு வாயில் திறக்கப்பட்டு 11ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கு ஒரு நாளைக்கு 2 ஆயிரம் டிக்கெட்கள் வழங்கப்படுகிறது. பக்தர்கள் இன்று காலை 9 மணி முதல் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இதற்காக வாணி அறக்கட்டளைக்கு ஒரு பக்தர் ரூ.10 ஆயிரம் நன்கொடையாக அளித்து, ரூ.300 செலுத்தி தரிசன டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு ஜெய விஜய துவார பாலகர்கள் சிலை வரை மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் அனைவரையும் மகா லகு தரிசனம் செய்து அனுப்பி வைக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.