தமிழகத்தில் ஜனவரி 4-வது வாரத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்பூசி முகாமைத் தொடக்கிவைத்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மருத்துவக் கலந்தாய்வு குறித்து கூறியது:
"உச்ச நீதிமன்றத்தில் 27 சதவிகித இடஒதுக்கீடு விவகாரத்திற்கு நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கிறது. திமுகவும், தமிழக அரசும் எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக ஓபிசி பிரிவினர் மாணவர்களுக்கு மிகப் பெரிய அளவிலான வாய்ப்பாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. இதன் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
15 சதவிகித மாணவர்களுக்கான இந்த கலந்தாய்வை நடத்த மத்திய அரசு முற்படும். 15 நாள்களில் கலந்தாய்வு நடந்து முடிந்துவிடும்.
இதன்பிறகு, ஜனவரி 3-வது வாரத்தில் தரவரிசைப் பட்டியலை வெளியிட இருக்கிறோம். இதைத் தொடர்ந்து, 4-வது வாரத்தின் தொடக்கத்திலேயே தமிழகத்தில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை 5,175 மாணவர்கள் சேர்க்கைக்கான வாய்ப்பு உள்ளது. இதில் 15 சதவிகிதம் மத்திய அரசு ஒதுக்கீடு தவிர்த்து, 4,319 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
மேலும், சுயநிதிக் கல்லூரிகளிலிருந்து 1,580 இடங்களையும் சேர்த்து, 5,899 மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
தமிழக அரசின் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின்படி, 439 மாணவர்களுக்கு இந்தாண்டு வாய்ப்பு கிடைக்கவுள்ளது."