பாஜகவுடன் எதிர்காலத்தில் கூட்டணி தொடரும்: பழனிசாமி

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமே அதிமுக - பாஜக தனித்துப் போட்டியிடுவதாகவும், எதிர்காலத்தில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி தொடரும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
பாஜகவுடன் எதிர்காலத்தில் கூட்டணி தொடரும்: பழனிசாமி

நாட்டின் நலன் கருதி தேசிய அரசியலில் பாரதிய ஜனதாவுடன் இணைந்து செயல்படுவோம் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சொந்த கட்சியினருக்கு வாய்ப்பு வழங்குவதற்காகவே உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக தனித்துப் போட்டியிடுவதாகவும் அவர் கூறினார். 

சேலம் புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது.

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகள் 490 பேரூராட்சிகள் 138 நகராட்சிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது அதிக இடங்களில் அதிமுக வெற்றி பெற்று முக்கிய பதவிகளை கைப்பற்றுவோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி,

ஒவ்வொரு கட்சியும் அவரவர் கட்சியினருக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என விருப்பப்படும் வழக்கம்தான். எம்பி மற்றும் எம்எல்ஏ தேர்தலில் குறைந்த அளவிற்கே வாய்ப்பு வழங்க முடியும். உள்ளாட்சி தேர்தலில் நிறைய பேருக்கு வாய்ப்பு வழங்கக் கூடிய சூழலில் கட்சியினர் அதிக அளவில் போட்டியிட வேண்டும் என ஒவ்வொரு கட்சியினரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுமே இந்த சிரமம் உள்ளது இந்த சூழ்நிலையில்தான் பிஜேபியுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உடன்பாடு ஏற்படவில்லை. எதிர்காலத்தில் தேர்தல் வரும்போது அப்போதைய நிலைப்பாடு தெரிவிக்கப்படும். அதிமுக கூட்டணியில் இருந்து பிஜேபி வெளியேறுவது என்று கூறுவது தவறு. அந்த கட்சியினருக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்துள்ளனர். தேசிய அரசியலைப் பொருத்தவரை நாட்டின் நலன் கருதி பிஜேபி யுடன் இணைந்து செயல்படுவோம். அப்போதுதான் தமிழகம் வளர்ச்சி பெறும் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று கூறினார்.

எங்கள் குழந்தை எங்களுக்கு முக்கியம். அவரவர் குழந்தை அவரவர்க்கு முக்கியம். கட்சி தலைமை நிர்வாகிகளுக்கு கட்சியினரை குழந்தை போன்றவர்கள் அவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 8 மாத கால திமுக ஆட்சியில் என்ன செய்தார்கள் என்று அவர்கள் சொல்லவில்லை. மக்கள் பட்ட துன்பமே அதிகம். முதலமைச்சரை பொறுத்தவரை அவரை அவரே புகழ்ந்து கொள்கிறார். சைக்கிளில் செல்வது நடைபயணம் இதுதான். அவருடைய அன்றாட பணியாக இருக்கிறது. நாட்டு மக்களின் பிரச்சினையை தீர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஜெட் வேகத்தில் கரோனா தொற்று  உயர்ந்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. அதிமுக ஆட்சியில் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தி பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. தற்போது கணக்கு குறைத்து காண்பிக்கப்படுகிறது. எண்ணிக்கையை குறைத்துக் காண்பிக்கிறார்கள். கொத்துக்கொத்தாக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

திமுக ஆட்சியில் நடைபெறும் கொலை கொள்ளை குறித்து சமூக ஊடங்களில் பதிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள் மீது பொய்வழக்கு பதிவு செய்யப்படுகிறது. சர்வாதிகார முறையில் திமுக ஆட்சி நடைபெறுகிறது.

பொங்கல் தொகுப்பு தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு முறையாக வழங்கப்படவில்லை. இருபத்தி ஒரு பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்த நிலையில் 16 பொருட்கள் வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதை யாராலும் மறைக்க முடியாது. பொங்கலை உற்சாகமாக கொண்டாட நினைத்த பொது மக்களை அரசாங்கம் ஏமாற்றிவிட்டது. மக்களின் வயிற்றில் அடித்து விட்டது. பொங்கல் தொகுப்பு வழங்கத் தொடங்கிய உடனே இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என நான் கோரிக்கை விடுத்தேன். அப்போதே விசாரணை நடத்தி இருந்தால் வெறும் 15 சதவீதம் பேருக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் உண்மை வெளிவந்து இருக்கும். ஆனால் நான் அறிக்கை வெளியிட்டு 17 நாட்கள் கடந்த பின்னர் சம்பிரதாயத்திற்காக விசாரணை நடத்துவோம் என்று அறிவித்துள்ளார். இதன் மூலம் எந்த உண்மையும் வெளிவராது என்று  பழனிசாமி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com