சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சியில், கூட்டணிக் கட்சித் தலைவர்களின் வரிசையில் ஓ. பன்னீர்செல்வம் நின்றிருந்தார்.
சென்னையில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக உள்ளிட்ட கட்சிகளை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார் திரௌபதி முர்மு.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தலைவர்கள் முதலில் திரௌபதி முர்முவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துப் பேசினர். எடப்பாடி பழனிசாமியும், தனது ஆதரவை தெரிவித்தார்.
அப்போது, அரங்குக்குள் வந்த ஓ. பன்னீர்செல்வம், கூட்டணிக் கட்சித் தலைவர்களின் வரிசையில் காத்திருந்தார். மேடையிலிருந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் புறப்பட்டுச் சென்றதும், மேடைக்குச் சென்று தனது ஆதரவை தெரிவித்து ஓ. பன்னீர்செல்வம் உரையாற்றினார்.
அதிமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில், ஓ. பன்னீர்செல்வம் மேடையில் ஏறாமல், தனித்து இருந்தார். எடப்பாடி பழனிசாமி கிளம்பும் வரை காத்திருந்து, பிறகு மேடையில் ஏறி, திரௌபதி முர்முவுக்கு தனது ஆதரவை தெரிவித்துக் கொண்டார்.