காரைக்காலில் காலராவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் இணை நோய்களால் உயிரிழந்தனர்.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீ ராமுலு ஞாயிற்றுக்கிழமை 2-ஆம் முறையாக காரைக்காலில் மருத்துவ குழுவினருடன் ஆய்வு செய்தார். இதுவரை 1,584-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
காரைக்கால் மாவட்டத்தில் பரிசோதிக்கப்பட்ட பெரும்பாலான தண்ணீர் மாதிரிகள் திருப்திகரமாக இல்லை. சில நோயாளிகளுக்கு காலரா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், தினசரி மருத்துவமனைக்கு வயிற்றுப்போக்குடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இயக்குநரகம் காரைக்கால் மாவட்டத்தை பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தி அறிவித்துள்ளது.
இந்நிலையில், காலராவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் இணை நோய்களால் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த தகவல் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | காரைக்காலில் காலரா: மக்கள் பீதியடைய வேண்டாம் - ஆளுநர் தமிழிசை
இதையடுத்து நோய் தடுப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைய வேண்டாம். வாந்தி, வயிற்றுப்போக்கால் இதுவரை 1,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
விடுமுறை: இந்நிலையில், காலரா நோய் பரவல் எதிரொலி காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள்களுக்கு விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
144 தடை உத்தரவு: காரைக்கால் மாவட்டத்தில் சிலருக்கு காலரா அறிமகுறி கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுக்க ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்.
கட்டுப்பாடுகளை பின்பற்றாதவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.