/

மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5.37அடி உயர்வு 

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 98,208 கன அடியாக அதிகரித்துள்ளதை அடுத்து, நீர்மட்டம் ஒரே நாளில் 5.37அடியாக உயர்ந்துள்ளது.  

News image
கடல் போல காட்சி அளிக்கும் மேட்டூர் அணை.
Updated On :1 பிப்ரவரி 2024, 9:47 am

DIN

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 98,208 கன அடியாக அதிகரித்துள்ளதை அடுத்து, நீர்மட்டம் ஒரே நாளில் 5.37அடியாக உயர்ந்துள்ளது.  

கர்நாடகம் மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  

செவ்வாய்க்கிழமை காலை வினாடிக்கு 50, 576 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து, புதன்கிழமை காலை வினாடிக்கு 98, 208 கன அடியாக அதிகரித்துள்ளது.  

நீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக செவ்வாய்க்கிழமை காலை 100.44 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 105.81 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5.37அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 72.57 டி.எம்.சியாக உள்ளது. 

மேட்டூர் அணை நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் நடப்பு ஆண்டில் டெல்டாபாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும் என்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர்வரத்தும் திறப்பும் இதே நிலையில் இருந்து வந்தால் இவ்வார இறுதிக்குள் மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.