

கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தக்கோரிய வழக்கு நாளை (ஜூலை 17) விசாரணைக்கு வருகிறது.
தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால், தங்கள் தரப்பு மருத்துவர்களை கொண்டு மறு உடல்கூராய்வு செய்ய வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு நடத்தப்பட்ட உடற்கூராய்வு விடியோ எடுக்கப்பட்டுள்ளதால், முறையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உடல் கூராய்வு அறிக்கையை வழக்கு விசாரணையின்போது காவல் துறையினர் நாளை தாக்கல் செய்யவும் உள்ளனர். இந்த விசாரணையின் முடிவில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்படுமா? என்பது தெரியவரும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தனியாா் பள்ளியில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி மா்மமான முறையில் இறந்தது தொடா்பாக, அவரது உறவினா்கள், பொதுமக்கள் கடந்த 5 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே இன்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதில், போராட்டக்காரர்கள் கற்களை வீசி பள்ளி மீது தாக்குதல் நடத்தினர். பள்ளி வளாகத்தில் இருந்த பேருந்துகளை டிராக்டர் கொண்டு இடித்து நொறுக்கினர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சூழ்ந்து பள்ளிப் பேருந்தை கவிழ்த்தனர். மேலும் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காவல் துறை வாகனங்களையும் தீயிட்டு எரித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.