சென்னை, விஐடியில் மேலும் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு 163 ஆக உயர்ந்துள்ளது.
வண்டலூரில் வேலூர் இன்ஸ்டிடியூர் ஆப் டெக்னாலஜியின் கிளையான விஐடி பல்கலை இயங்கி வருகிறது. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இங்குப் பயிலும் மாணவர்களுக்கு கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தது. இதையடுத்து செங்கல்பட்டு மருத்துவக்குழு கரோனா பரிசோதனை செய்ததில், முதல்கட்டமாக 12 மாணவர்கள், 13 மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கரோனா பரிசோதனை செய்து வருகின்றன. இந்நிலையில், இன்று மேலும் 45 பேருக்குத் தொற்று உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு 163 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னதாக, சென்னை ஐ.ஐ.டி.யில் 198 பேருக்கும், சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 11 பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ள நிலையில், தற்போது விஐடி பல்கலையிலும் கரோனா நோய்த் தொற்று பரவி வருகின்றது.