வாழ்வாதார பிரச்னைகளுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கடிதம்

மக்கள் சந்திக்கும் வாழ்வாதார பிரச்னைகளுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். 
வாழ்வாதார பிரச்னைகளுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கடிதம்

மக்கள் சந்திக்கும் வாழ்வாதார பிரச்னைகளுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். 

இதுகுறித்து முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக அரசின் சார்பில் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.  நிதித்துறை, வேளாண்துறை மற்றும் துறைகள் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பணிகளில் முழு வீச்சுடன் ஈடுபட்டுள்ளன. இதற்கென வர்த்தகர்கள், சிறு குறு தொழில் முனைவோர், பொருளாதார நிபுணர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டங்கள் நடந்து வருகின்றன.

• கடந்த கால அதிமுக ஆட்சியின் நிதி நிர்வாக குறைபாடுகள் காரணமாகவும், மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறை காரணமாகவும் தமிழ்நாடு மிகுந்த நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிதி நெருக்கடிகளை சமாளித்து மக்கள் நலத் திட்டங்களையும், தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவது சவால்கள் நிறைந்த பணியாக இருக்கும்.

• இந்த பின்னணியில் சிபிஐ(எம்) சார்பில் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு தேவைப்படும் சில முக்கிய கோரிக்கைகளைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். இவைகளை இந்த நிதிநிலை அறிக்கையிலேயே போதிய நிதி ஒதுக்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

• அதேபோன்று, மாநில சொந்த வருவாயை பெருக்குவதற்கும் சில ஆலோசனைகளையும் தங்களுக்கு இதன் மூலம் தெரிவித்துள்ளோம்.

• தமிழகத்தில் தேர்தல் நடைபெற்று கிராமப்புற ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புற ஊராட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்றுள்ளார்கள். இந்த உள்ளாட்சிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீட்டையும், அதிகாரங்களையும் வழங்கிட வேண்டும்.

•  நகர்ப்புற உள்ளாட்சிகளில் கடந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டவாறு, வேலை உறுதி திட்டத்தை சோதனை அடிப்படையில் நிறைவேற்றுவதற்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது நல்ல தொடக்கமாகும். இந்த நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்தை அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுப்படுத்திடவும் அதற்கான நிதி ஒதுக்கீட்டினை அதிகப்படுத்திடவும் வேண்டும்.

பழைய பென்சன் திட்டம்
• 01.04.2003க்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பங்களிப்புடன் வரையறுக்கப்பட்ட புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பயன் வரையறுக்கப்பட்ட  பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

• அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

• போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 73 மாதங்களாக வழங்கப்படாத பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும். 2020க்கு பிறகு ஓய்வு பெற்ற பல ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பென்சன் உள்ளிட்ட ஓய்வு கால பயன்கள் இதுவரை வழங்கப்படவில்லை. அதை உடனடியாக வழங்க வேண்டும்.

• விவசாயிகள் கூட்டுறவு சொசைட்டிகளில் பெற்ற குறுகிய கால கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், மத்திய கால கடன்களாக மாற்றப்பட்ட விவசாயக் கடன் பாக்கிகளையும் ரத்து செய்திட வேண்டும்.

சிறு-குறு தொழில் பாதுகாப்பு:
• பெரும்பாலான மூலப் பொருட்கள் பெரு நிறுவனங்களால் மட்டுமே உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் பஞ்சு, இரும்பு, தாமிரம், பிளாஸ்டிக் கிரானூல்ஸ் உள்ளிட்ட மூலப் பொருட்கள் ஒன்று முதல் இரண்டு மடங்கு விலைகள் கூடியுள்ளன. இதனால், சிறு-குறு நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களின் அடக்க விலை, அந்த பொருட்களை கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யும் காலத்திற்கும், உற்பத்தி செய்து வினியோகிக்கும் காலத்திற்கும் இடையே மூலப்பொருட்களின் விலையை விட அதிகமாவதால் பெரும் நட்டத்தை சந்தித்து வருகின்றன. இதை எதிர்கொள்வதற்கு அரசே இந்த மூலப்பொருட்களை கொள்முதல் செய்து சிறு குறு நிறுவனங்களுக்கு சலுகை விலையில் வழங்கிட வேண்டும்.
 
• தமிழக அரசு ஒரு ஆன்லைன் விற்பனை தளத்தை உருவாக்கலாம். அரசு நிறுவனங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்கள் கூட்டுறவு அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அரசுசார் அமைப்புகள் அனைத்தும் இந்த விற்பனை தளத்தின் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். இந்த விற்பனை தளம் சிறு-குறு தொழில்களின் உற்பத்தி பொருட்களை மட்டும் விற்பனை செய்வதற்கான தளமாகவும் அமைக்கப்பட வேண்டும். மேலும், இந்தியா முழுவதும் இதை சந்தைப்படுத்துவதற்கான முறையில் விளம்பரப்படுத்துவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இத்தகைய நிறுவனங்கள், தங்கள் தேவையில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் அளவிற்காவது சிறு குறு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்வதை கட்டாயமாக்க வேண்டும்.

• சிறு குறு தொழில்களுக்கு சலுகை கட்டணத்தில் மின்சாரம் வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். தொழிற்பேட்டைகளில் தடையில்லா மின்சாரம் வழங்க தனி சப் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட வேண்டும். தொழிற்பேட்டைகளுக்கு பொதுவான சப் ஸ்டேஷனுடன் இணைந்த ஜெனரேட்டர் அமைப்பதற்கு அரசு நிதி உதவி அளிக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் நலன்:
• மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகை ரூ.3000/- வழங்க வேண்டும்.

பெண்கள் நலன்
• தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி,  பெண்களுக்கு மாதம் ரூ. 1,000/- உரிமை தொகை வழங்கிட வேண்டும்.

• முதியோர் உதவி தொகை உள்ளிட்ட அனைத்து உதவி தொகைகளையும் ரூ. 3,000/- ஆக உயர்த்திட வேண்டும்.

• மகளிர் ஆணையம், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் போன்றவற்றிற்கு நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும்.

ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள்

• ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டு அரசு உத்தரவிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

• சாலை, பூங்கா, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சுகாதார நிலையம், பள்ளிகள் உள்ளிட்ட அடிப்படை மேம்பாட்டு வசதிகள் இல்லாத ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மேற்கண்ட மேம்பாட்டு வசதிகளை ஏற்படுத்திட உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

வெள்ளப் பெருக்கிலிருந்து பாதுகாப்பு:
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்டு மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் வீழ்த்தப்படுவது வாடிக்கையாகி விட்டது. இந்த பிரச்சனை சீர்படுத்த வேண்டிய முக்கிய பிரச்சனையாகும். உதாரணமாக, வெள்ளப் பெருக்கால் தொடர்ச்சியாக பாதிக்கப்படும் சென்னை போன்ற மாவட்டங்கள், வெள்ளப் பெருக்காலும், புயலாலும் வருடா, வருடம் பாதிக்கப்படும் கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாதுகாப்புக்கும் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அடையாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளையும், ஏரிகளையும் பருவ மழைக்கு முன்னரே தூர்வாருதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், இதுபோன்ற பாதிப்புகள் இனியும் ஏற்படா வண்ணம் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

அரசின் வருவாய் அதிகரித்திட
• தமிழ்நாட்டில் கனிம வளங்கள், தாது மணல், மணல் வியாபாரம், கிரானைட் உள்ளிட்டவைகள் மீது கூடுதல் விலை தீர்மானித்து வியாபாரத்தை முறைப்படுத்துவதின் மூலம் சில ஆயிரம் கோடி வருமானத்தை பெருக்கிட முடியும்.

• பத்திரப் பதிவு துறையில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் சொத்துகள் மீதான அரசு வழிகாட்டு மதிப்பீட்டை குறைத்து பதிவுக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் அரசுக்கு வருவாய் சில ஆயிரம் கோடி குறைவு ஏற்படுகிறது. இதனை முறைப்படுத்தி வசூலித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

• லாபம் ஈட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் மருத்துவ நிறுவனங்கள் மீது தமிழக அரசு சேவை வரியினை தீர்மானித்து வசூலிக்கலாம். இதன் மூலம் ஓரளவு வருவாய் ஈட்ட முடியும் என தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com