முதல்வர் மு.க.ஸ்டாலின் துபை பயணம் குறித்து சமூக ஊடகங்களில் பொய்யான தகவலை பரப்பிய பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதற்குப் பிறகு, முதல்முறையாக நான்கு நாள்களுக்கு வெளிநாட்டுப் பயணமாக துபை, அபுதாபி போன்ற நாடுகளுக்குச் சென்று ஆறு மிக முக்கியமான தொழில் நிறுவனங்களுடன் 6,100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தங்கள் போடப்பட்டிருப்பதன் மூலமாக 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகப் போகிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்னை வந்தடைந்த பின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திப்பில் தெரிவித்தார்.
இந்நிலையில், சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றிய பாஜக செயலாளர் அருள் பிரசாத், முதல்வர் ஸ்டாலின் துபை பயணத்தில் அணிந்திருந்த உடை ரூ.17 கோடி என பழனிவேல் தியாகராஜன் தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் பொய்யான தகவலை பரப்பினார். இதனை பலரும் பகிரவும் செய்திருந்தனர்.
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பழவேல் தியாகராஜன் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், பாஜக நிர்வாகி அருள் பிரசாத்தை கைது செய்துள்ள போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் வெளிநாட்டு பயணம் குறித்து பெய்யான செய்தியை சமூக ஊடகங்களில் பரப்பி அவதூறு செய்ததாக அருள் பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.