/

சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை: மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் விசாரணை

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சம்ஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது தொடர்பாக மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். 

News image

மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர்

Updated On :2 மே 2022, 8:48 am

DIN

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது தொடர்பாக மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிதாகச் சோ்ந்த மாணவா்களை வரவேற்று வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா்கள் பி. மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா், கல்லூரி முதல்வா் ஏ.ரத்தினவேல் ஆகியோா் கலந்துகொண்டனா்.

அப்போது மாணவா்கள் தங்களது சீருடையை அணிந்தபின்பு ஏற்றுக்கொள்ளும் வழக்கமான ‘ஹிப்போகிரட்டிக்’ உறுதிமொழிக்குப் பதிலாக, மாணவா் தலைவர் ஆங்கிலத்தில் மொழிபெயா்க்கப்பட்ட சம்ஸ்கிருத ‘மகரிஷி சரக் சப்த்’ உறுதிமொழியை வாசிக்க, இதர மாணவா்கள் தொடா்ந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். இந்த விவகாரம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனை முதல்வா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் ஏ.ரத்தினவேல் பதவி நீக்கம் செய்யப்பட்டு, காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாா். இதுதொடர்பாக அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளது. 

இந்நிலையில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதிஷ் குமாரவேல் உள்ளிட்ட 4 மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டார். 

அப்போது மாணவர்கள் தரப்பில், ஆங்கில மொழிபெயர்ப்பை மட்டுமே தாங்கள் வாசித்ததாகவும் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளனர். தேசிய மருத்துவ கவுன்சில் விதிகளின்படியே தாங்கள் உறுதிமொழி ஏற்றதாகவும் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.