தமிழகத்தில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் சில்லறை விலையை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தியுள்ளதை அடுத்து ஒரு லிட்டர் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை ரூ.60 உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆவின் கொள்முதல் விலையாக பசும் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 ஆக உயர்த்தப்பட்டு ரூ.35 ஆகவும், எருமைப் பால் லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டு ரூ.44 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வின் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவினத்தை பகுதியாக ஈடு செய்யும் வகையில் விற்பனை விலை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஆரஞ்சு நிற பால் பாக்கெட் (நிறைகொழுப்பு) சில்லறை விற்பனை விலை லிட்டருக்கு ரூ.12 ஆகவும், ஒரு லிட்டர் விலை ரூ.60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அட்டைத்தாரர்களுக்கு விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் ஆரஞ்சு பால் பாக்கெட் ரூ.46-க்கே விற்பனை செய்யப்படும்.
இதையும் படிக்க | ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு: நாளை முதல் அமல்!
இந்த விலை உயர்வு சனிக்கிழமை(நவ.5) முதல் அமலுக்கு வருகிறது.
இருப்பினும், நுகர்வோரின் நலன் கருதி சமன்படுத்தப்பட்ட நீல நிற பாக்கெட் பால் மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டின் விலையில் மாற்றமின்றி தற்போதைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வுக்கு பின்னரும் ஆவின் நிறைகொழுப்பு பால் (அட்டை) தனியார் பாலின் விலையை ஒப்பிடுகையில் ரூ.24 குறைவு. சில்லறை விலையில் விற்கப்படும் நிறைகெழுப்பு பால் தனியார் பாலின் விலையை ஒப்பிடுகையில் ரூ.10 குறைவு எனவும், பால் உற்பத்தியாளர்களின் நலன் கருதி இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொண்டு நுகர்வோர்களும், சில்லறை விற்பனையாளர்களும், மொத்த விற்பனையாளர்களும் தொடர்ந்து ஆவின் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.