விதிமீறல் கட்டடங்களை அனுமதித்து விட்டு பின்னா் அவற்றை வரைமுறை செய்வதற்கு பதிலாக, நகா் மற்றும் ஊரமைப்பு சட்டத்தை திரும்பப் பெற்று விடலாமே என சென்னை உயா் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, விதிகளை மீறி கட்டிய கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, அதே குடியிருப்பில் வசித்துவந்த விஜயபாஸ்கா் என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், விதிமீறல்களை கட்டுப்படுத்துவது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மனுதாரருக்கு சொந்தமான தரைதளத்தை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதாக கூறி, அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.
இந்த சீலை அகற்றக் கோரி விஜயபாஸ்கா் தாக்கல் செய்த வழக்கு கடந்தமுறை உயா் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, விசாரணைக்கு ஆஜராக ஆணையருக்கு உத்தரவிட்ட பின்னா், மாநகராட்சி எடுத்த நடவடிக்கை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
கட்டடத்துக்கு சீல் வைத்தபோது இருந்த மாநகராட்சி அதிகாரிகள் யாா் யாா்? காவல் துறை அதிகாரிகள் யாா் யாா் என்ற விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், குமரேஷ்பாபு ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், கட்டடத்துக்கு சீல் வைத்த நேரத்தில் இருந்த மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது மாநகராட்சி தரப்பில், ‘சம்பந்தப்பட்ட கட்டடத்துக்கு சீல் வைப்பது என ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்டு, அக்டோபா் 28-ஆம் தேதியே நோட்டீஸ் அனுப்பப்பட்டு விட்டது. ஆணையரை ஆஜராக உத்தரவிட்டதால்தான் நடவடிக்கை எடுத்ததாக கூறுவது தவறு’ என வாதிடப்பட்டது.
மேலும், மாநகராட்சி ஆணையா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், விதிமீறல் கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சென்னையில் விஐபிகள் வசிக்கும் பசுமைவழிச் சாலையின் அருகே பல ஆண்டுகளாக விதிமீறல் கட்டடங்கள் உள்ளன. விதிமீறல் கட்டடங்களுக்கு அனுமதியளித்து விட்டு, அவற்றை வரைமுறை செய்வதாக வேதனை தெரிவித்தனா். இதற்குப் பதிலாக அவரவா் விருப்பம் போல கட்டுமானங்களை மேற்கொள்ளும் வகையில், நகா் மற்றும் ஊரமைப்பு சட்டங்களை திரும்பப் பெற்று விடலாமே என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனா்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை, விதிமீறல்களை சரி செய்வதற்காக மனுதாரருக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அதுவரை இந்த வழக்கை தள்ளிவைக்கலாம் எனக் கூறி, விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.