பொள்ளாச்சி அருகே எலிக்காய்ச்சல்! கர்ப்பிணிப் பெண் பலி
கோவை: எலிக் காய்ச்சலுக்கு ஐந்து மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள பணிக்கம்பட்டி பகுதியில் 23 வயதான வனிதா என்ற இளம்பெண் வசித்து வந்தார். ஐந்து மாத கர்ப்பிணியான வனிதாவுக்கு கடந்த சில நாள்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வனிதா கோவை பொள்ளாச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் காய்ச்சல் ஓரளவு சரியான நிலையில் வீடு திரும்பிய வனிதா தீபாவளி பண்டிக்கைக்காக அன்னூர் சென்றிருக்கிறார்.
அங்கு அவருக்கு உடல்நிலை மோசமான நிலையில் கடந்த 31-ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மீண்டும் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வனிதாவுக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருந்ததோடு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனை அடுத்து மருத்துவர்கள் பல்வேறு சோதனைகள் மேற்கொண்டதில் நோயை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில் வனிதாவுக்கு எலிக் காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டதில் லெப்டோஸ்பைரோசிஸ் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்தார்.
இது தொடர்பாக சுகாதார துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் அதிகாரிகள் பணிக்கம்பட்டி மற்றும் அன்னூர் ஆகிய இடங்களில் காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
எலி காய்ச்சலுக்கு ஐந்து மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.