
ஐயம்பேட்டை பகுதியில் காலை 8 மணியளவில் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப வந்த நபரை தெலங்கானா பதிவு எண் கொண்ட காரில் கடத்திய சம்பவத்தில் 15 நிமிடங்களில் கூண்டோடு சுற்றி வளைத்து காவல்துறையினர் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட கடத்தல் கும்பலிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐயம்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் ஜெய் கணேஷ் . இவர் தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப காஞ்சிபுரம் வாலாஜாபாத் சாலையில் நின்று கொண்டிருந்த போது தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பதிவு எண் கொண்ட காரில் வந்த மர்ம நபர்கள் ஜெய்கணேஷை வலுக்கட்டாயமாக வாகனத்துக்குள் ஏற்றி தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த உளவுத்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சோனச்சலம் இதனை கண்டு காரினை படம் பிடித்து காவல் கட்டுபாட்டு அறைக்கு அனுப்பினார்.
உடனடியாக செயல்பட்ட காவல்துறையினர் இரட்டை மண்டபம் அருகே காரினை மடக்கி அனைவரையும் கைது செய்து வாலாஜாபாத் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க.. காத்திருக்கின்றன மோர்பியில் மரித்தவர்களின் ஆன்மாக்கள்!
விசாரணையில் கடந்த காலங்களில் ஜெய்கணேஷ் தெலங்கானா மாநிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அங்கு உடன் பார்த்த நண்பர் சந்திரபாபுவிடம் 16 லட்சம் ரூபாய் பெற்று ஐஎஃப்எஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த நிதி நிறுவனங்கள் மூடப்பட்டதால், ஜெய்கணேஷ் ஆந்திர மாநிலத்தில் இருந்து தனது சொந்த ஊரான அய்யம்பேட்டைக்கு குடி பெயர்ந்து விட்டார். சந்திரபாபு தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்த நிலையில் இன்று அவரது கூட்டாளிகளான மகேஷ் (28), கிரி பாபு (32), சந்திரசேகர் (29) ஆகியோர் ஜெய்கணேஷை காரில் கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்துள்ளது.
கடத்த முயன்றவர்களிடம் தற்போது விசாரணை நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
உளவுத்துறை காவல் அதிகாரி அளித்த உடனடி தகவலின் பெயரில் காரில் கடத்திச் செல்லப்பட்ட நபர் மற்றும் அதை மேற்கொண்ட நபர்கள் என அனைவரும் துரிதமாக 15 நிமிடங்களில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.