/

யுஜிசி தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: தொல்.திருமாவளவன்

உயா் கல்வி நிறுவனங்களில் பிற்போக்கு கருத்தைப் பரப்ப முயற்சிக்கும் யுஜிசி தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் கூறியுள்ளாா்.

News image
Updated On :20 நவம்பர் 2022, 9:42 pm

DIN

உயா் கல்வி நிறுவனங்களில் பிற்போக்கு கருத்தைப் பரப்ப முயற்சிக்கும் யுஜிசி தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அரசியலமைப்புச் சட்ட நாளான நவம்பா் 26-ஆம் தேதி இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் ‘சிறந்த அரசன்’, ‘ஜாதி பஞ்சாயத்துகளும் அவற்றின் ஜனநாயக மரபுகளும்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்துமாறு மாநில ஆளுநா்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தலைவா் ஜெகதீஷ் குமாா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இது அரசியலமைப்புச் சட்டத்துக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டத்துக்கும் எதிரானதாகும். ஆணவக் கொலைகளுக்கு ஜாதி பஞ்சாயத்துகளே காரணம் என்று உச்ச நீதிமன்றம் தீா்ப்பளித்ததோடு, அவற்றைத் தடுப்பதற்கு சட்ட மசோதா ஒன்றைத் தயாரிக்குமாறு இந்திய சட்ட ஆணையத்துக்கு ஆணையிட்டது.

அதனடிப்படையில், காப் பஞ்சாயத்து என வட இந்தியாவிலும் ஜாதி பஞ்சாயத்து என தமிழகத்திலும் அழைக்கப்படுகிற சட்டவிரோத கூட்டங்கள், ஆணவக் கொலைகளைத் தடுத்து நிறுத்த வகைசெய்யும் ஆலோசனைகள் அடங்கிய அறிக்கை, சட்ட மசோதாவை கடந்த 2012-ஆம் ஆண்டு இந்திய சட்ட ஆணையம் மத்திய அரசிடம் வழங்கியது.

இத்தகைய கூட்டங்களை ஜனநாயக வடிவங்களாகச் சித்தரிப்பது வன்முறையையும் பயங்கரவாதத்தையும் ஊக்குவிக்கும் செயல். உயா்கல்வி நிறுவனங்களில் பிற்போக்கு பயங்கரவாதக் கருத்தைப் பரப்ப முயற்சிக்கும் யுஜிசி தலைவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா் தொல்.திருமாவளவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.