மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தமிழிசை மூவர் மணிமண்டபம் புனரமைப்புப் பணி விரைவில்: தமிழக அரசு அறிவிப்பு

சீர்காழியில் உள்ள தமிழிசை மூவர் மணிமண்டபம் புனரமைப்புப் பணி விரைவில் தொடங்கும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

News image
Updated On :21 நவம்பர் 2022, 10:56 am

DIN

சீர்காழியில் உள்ள தமிழிசை மூவர் மணிமண்டபம் புனரமைப்புப் பணி விரைவில் தொடங்கும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

சீர்காழியில் பிறந்து, வாழ்ந்து உலகெங்கும் தமிழிசையை பரப்பியவர்கள் ஆதி தமிழிசை மூவர்களான முத்துதாண்டவர், அருணாச்சலகவிராயர், மாரிமுத்தாபிள்ளை. இந்த ஆதி தமிழிசை மூவர்களின் நினைவைப் போற்றும் வகையில் சீர்காழியில் கட்டப்பட்டுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபம் போதிய பராமரிப்பின்றி, பொலிவிழந்து, களையிழந்து காணப்படுகிறது. 

தமிழிசை மூவர் மணிமண்டபத்தை சீரமைக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்களும் பொதுமக்கள் பலரும் வலியுறுத்தி வந்த நிலையில் புனரமைப்புப் பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பு:

தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்களும், கர்நாடக இசைக்கு தமிழ் கீர்த்தனைகளை இயற்றிய தமிழிசை மும்மூர்த்திகளான பதினான்காம் நூற்றாண்டில் சீர்காழியில் பிறந்த முத்துத் தாண்டவர், பதினெட்டாம் நூற்றாண்டில் தில்லையாடியில் பிறந்த அருணாசலக் கவிராயர் மற்றும் திலைவிடங்கள் கிராமத்தில் பிறந்த மாரிமுத்தாப் பிள்ளை ஆகிய மூவரின் நினைவாக 2000 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி ’தமிழிசை மூவருக்கு மணிமண்டபம் நிறுவப்படும்’ என்று அறிவித்து, பின்னர் 2010 ஆம் ஆண்டு ரூ.1,51,00,000/- (ரூபாய் ஒரு  கோடியே ஐம்பத்து ஒன்று இலட்சம் மட்டும்)  மதிப்பீட்டில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் 0.44 ஏக்கர் பரப்பளவு  இடத்தில், 358.80 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பட்ட வழிகாட்டுதலின் கீழ் மைய மண்டபத்தில் ஏழு கலசங்களுடன், எந்த திசையிலிருந்தும் தமிழிசை மூவரைக் காணும் வகையில் இம்மணிமண்டபம் வடிவியல் ரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மணிமண்டபம் கடந்த காலங்களில் சரிவர பராமரிக்கப்படாததால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனு வரப்பெற்றதைத் தொடர்ந்து, தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் சிறப்பு பழுது பார்ப்பதற்கும், புதிய கழிப்பறை மற்றும் அலங்கார கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கும் பொதுப்பணித் துறையின் மூலம் திட்ட மதிப்பீடு பெறப்பட்டு ரூ.47,02,500/-க்கு நிதியொப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புனரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.