சேலத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக ஏடிசி நகர் பாலத்தின் மீது தண்ணீர் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் பரவலாக மாலை நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் அடிப்படையில் நேற்று சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதனடிப்படையில் ஏற்காட்டில் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் ஏற்காட்டில் இருந்து வெளியேறும் தண்ணீரால், கோரிமேட்டில் உள்ள ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.
இதனால் திருமணிமுத்தாற்றை நோக்கி வரும் காட்டாற்று வெள்ளம் ஏடிசி நகர் பாலத்தில் மீது செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பாதுகாப்பாக சாலையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாலத்துக்கு மேலே தண்ணீர் அதிகரித்து வருவதால் போக்குவரத்துக்கு அந்த சாலை தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.