தமிழ்நாட்டு மண் எப்படி இருக்க வேண்டும் என முத்துராமலிங்க தேவர் நினைத்தாரோ அதனை பாஜக நிறைவேற்றும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை விழா பசும்பொன்னில் கோலாகலமாக இன்று (அக்.30) தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்திவிட்டு பசும்பொன் நோக்கி சென்றுகொண்டுள்ளோம்.
மக்கள் பிரதிநிதியாக இருந்து மக்களிடம் அற்புதமான கருத்துக்களை கொண்டு சேர்த்தவர் முத்துராமலிங்க தேவர். ஆளும் அரசு கைப்பாவையாக மாறியுள்ளது.
தேவர் மறுபடியும் திரும்பி வரவேண்டிய தேவை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. முத்துராமலிங்க தேவரின் எண்ணங்களை பாஜக நிறைவேற்றும் எனக் குறிப்பிட்டார்.