முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பு ஞாயிற்றுக் கிழமை அதிகரிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை. இதனால் அணைக்குள் சனிக்கிழமை நிலவரப்படி தண்ணீர் வரத்து விநாடிக்கு 672 கன அடியாகவும், அணையிலிருந்து நீர் வெளியேற்றம் விநாடிக்கு 511 கன அடியாகவும் இருந்தது.
இந்நிலையில், அணை அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மழை அறிவிப்பு மஞ்சள் எச்சரிக்கை வெளியிடப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் விநாடிக்கு 1,500 கன அடியாக திறந்து விடப்பட்டது.
அணை நிலவரம்
அணையின் நீர்மட்டம் 135.50 அடியாக இருந்தது. அணையில் நீர் இருப்பு 5,992 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 888 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1,500 கன அடியாகவும் இருந்தது. தேக்கடி ஏரியில் 1.2 மில்லி மீட்டர் மழை பெய்தது.
மின் உற்பத்தி
தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் மின்சார உற்பத்தி அக்.17 முதல் ஒரு மின்னாக்கி மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி மட்டுமே நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை 1,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் லோயர் கேம்ப்பில் உள்ள 4 மின்னாக்கிகளும் இயக்கப்பட்டு தலா 35,35,35,30 என மொத்தம் 135 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியை தொடங்கியது.